

மோடி அரசு அடக்குமுறையை ஏவி வருகிறது – கே.எஸ்.அழகிரி
ராகுல் காந்தி எம்.பி. பதவி பறிப்பை கண்டித்து சிதம்பரம் காந்திசிலை அருகில் காங்கிரஸ் கட்சி சார்பில் அறவழி போராட்டம் இன்று நடந்தது.
போராட்டத்துக்கு காங்கிரஸ் கட்சியின் கடலூர் மாவட்ட தலைவர் செந்தில்நாதன் தலைமை தாங்கினார். மாநில செயலாளர் சித்தார்த்தன் முன்னிலை வகித்தார். இதில் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட காங்கிரஸ் கட்சியின் தமிழ்நாடு தலைவர் கே.எஸ்.அழகிரி நிருபர்களுக்கு பேட்டியளித்தார்.
அப்போது அவர் கூறியதாவது:- கர்நாடகா மாநிலத்தில் ராகுல் காந்தி பேசியது தொடர்பாக குஜராத்தில் ஒரு நபர் வழக்கு தொடர்ந்தார்.
வழக்கு தொடுத்தவரே இந்த வழக்கை நிறுத்தியநிலையில், பா.ஜ.க. அரசு நீதிபதியை மாற்றி புதிய நீதிபதியை நியமித்து இந்த வழக்கை புதுப்பித்து நீதியை வாங்கி உள்ளனர். பொதுவெளியில் ராகுல் காந்தி பேசினால் அதற்கு பிரதமர் பதில் அளிக்கவேண்டிய கட்டாயம் இல்லை. ஆனால் பாராளுமன்றத்தில் ராகுல் காந்தி உட்பட யார் பேசினாலும் அதற்கு பிரதமர் மோடி பதில் அளிக்க வேண்டும் என்பதாலும், இதனால் பல உண்மைகள் வெளிவரும் சூழல் உருவாகும் என்தாலும் ராகுல் காந்திக்கு எதிரான வழக்கில் நீதி வாங்கப்பட்டுள்ளது. ஜனநாயக நாட்டில் பாராளுமன்றத்தில் எதிர்கட்சிகள் பேசினால் அதற்கு ஆளும்கட்சி பதில் அளிக்க வேண்டும். ஆனால் எதிர்கட்சிகளை பேசவிடாமல் அடக்குமுறையை ஏவிவரும் மோடி அரசு எதிர்கட்சிகளின் குரல்வலையை நெரித்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.