

வடக்கில் அமைக்கப்படும் விகாரைகளை அகற்றுங்கள்; சபையில் கஜன் கர்ஜனை
நாவற்குழியில் அண்மையில் திறந்து வைக்கப்பட்ட பௌத்த விகாரை உடனடியாக அகற்றப்பட வேண்டும் என்றும் கைதடியில் அமைக்கப்பட்டு வரும் விகாரை,குருந்தூர்மலை விகாரை,கொக்குத்தொடுவாய்,மாங்குளம் பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் விகாரைகளும் உடனடியாக அகற்றப்பட வேண்டும் என தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் பாராளுமன்ற உறுப்பினர் செல்வராசா கஜேந்திரன் நேற்று சபையில் இடம்பெற்ற அமர்வில் வலியுறுத்தினார்.
அவர் மேலும் பேசுகையில் ,
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க சர்வாதிகார ஆட்சி நோக்கிச் செல்கிறார்.வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களில் தமிழர் தாயகத்தை அழிக்கும் வகையில் திட்டமிட்ட வகையில் சிங்கள குடியேற்றங்கள் உருவாக்கப்படுகின்றன.யாழ்ப்பாண மாவட்டத்தில் நாவற்குழியில் கூட்டுப்படைகளின் தளபதியான வேந்திர சில்வாவினால் பௌத்த விகாரை திறந்து வைக்கப்பட்டது.ஒரு சிங்களவர்கள் கூட வாழாத நாவற்குழி பகுதியில் ராஜபக்ஷர்களினால் சிங்கள குடியேற்றம் உருவாக்கப்பட்டது.புகையிரத திணைக்களத்துக்கு சொந்தமான காணியில் சட்டவிரோதமான முறையில் பௌத்த விகாரை அமைக்கப்பட்டு சவேந்திர சில்வாவினால் திறந்து வைக்கப்பட்டது.
சவேந்திர சில்வாவினால் திறந்து வைக்கப்பட்ட விகாரை அவ்விடத்தில் இருந்து அகற்றப்பட வேண்டும்.அத்துடன் கைதடியில் அமைக்கப்பட்டு வரும் விகாரை, குருந்தூர்மலை விகாரை, கொக்குத்தொடுவாய்,மாங்குளம் ஆகிய பகுதிகளில் அமைக்கப்பட்டு வரும் விகாரைகள் அகற்றப்பட வேண்டும்.
நாங்கள் பௌத்தத்திற்கும்,சிங்களவர்களுக்கும் எதிரானவர்கள் அல்ல,நயினாதீவு,கிளிநொச்சியில் உள்ள பௌத்த விகாரைகளுக்கு எதிர்ப்பு தெரிவிக்கவில்லை,விடுதலைப் புலிகள் அமைப்புக் காலத்தில் கூட இந்த விகாரைகள் இருந்தன,போராளிகளினால் எவ்வித பாதிப்பும் பௌத்த விகாரைகளுக்கு ஏற்படுத்தப்படவில்லை.ஆனால் யுத்தத்தின் பின்னர் தமிழரின் தாயகம் இராணுவத்தின் துணை ஊடாக திட்டமிட்டு அழிக்கப்படுகிறது என அவர் தெரிவித்தார்.