

பொதுமன்னிப்பு என குற்றவாளியாக முத்திரை குத்தி விடுதலை செய்யப்படும் அரசியல் கைதிகள்!; ஏற்க முடியாது!
பொதுமன்னிப்பு என குற்றவாளியாக முத்திரை குத்தி விடுதலை செய்வதை ஏற்க முடியாதென அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பின் இணைப்பாளர் அருட்தந்தை மா.சத்திவேல் தெரிவித்துள்ளார்.
அவரால் இன்று (18.03.2023) வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவ் அறிக்கையில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
பயங்கரவாத தடை சட்டத்தினால் 15 வருட வாழ்வை தொலைத்துவிட்ட அரசியல் கைதியான கிளிநொச்சியை சேர்ந்த விவேகானந்தனூர் சதீஷ்குமார் இன்று வெளி உலகையும் குடும்பத்தையும் காணும் வாய்ப்பை பெற்றுள்ளார். சிறையில் வாடும் ஏனைய அரசியல் கைதிகளும் துரிதமாக விடுதலை செய்யப்படல் வேண்டும் என்றும் எந்த வடிவத்திலும் பயங்கரவா தடைச்சட்டம் இனிமேலும் தொடர்வதற்கு தெற்கின் சமூகம் இடமளிக்கூடாது என்றும் அதற்கான அழுத்தத்தை தொடர்ந்து கொடுக்க வேண்டும் என்றும் கேட்டுக் கொள்கின்றோம்.
சதீஷ்குமார் மற்றும் அவருடைய குடும்பத்தாருடைய தனிப்பட்ட மகிழ்வில் நாமும் பங்கு கொடுக்கின்றோம். ஆனால் பொது மன்னிப்பு என குற்றவாளியாக முத்திரை குத்தப்பட்டு அரசியல் கைதிகளை விடுதலை என வெளியில் அனுப்புவதை அரசியல் கைதிகளை விடுதலை செய்வதற்கான தேசிய அமைப்பு என்றுமே ஏற்றுக் கொள்வதில்லை.
அரசியல் கைதிகளுக்கு ஜனாதிபதி மன்னிப்பு என்பது அரசு பயங்கரவாதத்தினை அங்கீகரிப்பதாகவும் அதற்கு எதிரான மக்களின் விடுதலை செயற்பாட்டினை தொடர்ந்து பயங்கரவாதமாக்குவதுமான செயலுமாகும். தற்போதைய ஜனாதிபதியின் அரசியல் கைதியான சதீஷ்குமாரின் விடயத்திலும் அதுவே மீண்டும் உறுதி செய்யப்பட்டுள்ளது.
அரசியல் கைதிகளின் என்போர் தேசத் துரோகிகள் அல்ல. பயங்கரவாதிகளும் அல்ல. அவர்களை குற்றவாளிகளாக அடையாளப்படுத்தி காலத்திற்கு காலம் ஜனாதிபதிகள் விடுதலை என வெளியில் அனுப்புவது என்பது தமிழ் மக்களையும் தமிழர்களின் அரசியல் போராட்டத்தையும் கொச்சைப்படுத்தி அவமதிக்கும் செயலாகும்.
தற்போதைய ஜனாதிபதி 25 ஆவது சுதந்திர தினத்திற்கு முன்னர் இன பிரச்சனைக்கான தீர்வு என்று நாடாளுமன்றத்தில் கொக்கரித்தார் தமிழ் மக்கள் விரும்பாத 13ம் யாப்பு திருத்தத்தை அமுல்படுத்தப் போவதாக அரசியல் நாடகம் ஆடினார் அது பயங்கரவாதமாகும் அரசியல் யாப்பில் உள்ள 13 ஆம் யாப்பு திருத்தத்தை அமுல்படுத்த வேண்டாம் என்று கூறி பெருமளவான இயக்குகள் வீதி போராட்டத்தை நிகழ்த்தினார் பயங்கரவாத தடைச்சட்டம் இவர்களுக்கு எதிராக பாயவில்லை இவர்களா தேசப்பற்றாளர்கள்?
விடுதலை செயற்பாட்டை பயங்கரவாதமாக்கி அதற்கு துணையாக பயங்கரவாததடை சட்டத்தை கொண்டு வந்து 44 ஆண்டு காலமாக பாதுகாப்பதும் 75 வது சுதந்திர ஆண்டிலும் அதன் பாதுகாப்பிலே ஆட்சி செய்ய நினைப்பதும் அச்சட்டத்தினை புது பெயரில் தொடர வழி சமைப்பதும் பயங்கரவாதமாகும்.
பயங்கரவாத தடை சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தொடர்ந்து சிறையில் வாடும் தமிழக அரசியல் கைதிகளையும் அதே சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு தூக்குத் தண்டனையை அனுபவித்துக் கொண்டிருக்கும் மூன்று அரசியல் கைதிகளையும் அரசியல் தீர்மானம் எடுத்து நிபந்தனை இன்றி விடுதலை செய்வதற்கான ஆக்கப்பூர்வ நடவடிக்கை எடுப்பது தமிழர்களின் அரசியல் தீர்வு காண ஆரம்ப செயற்பாடு என்பதை மீண்டும் வலியுறுத்துகின்றோம்.
அன்று குட்டிமணி கூறியது போன்று தற்போது அரசு பயங்கரவாதம் வேறு வடிவத்தில் தெற்கு பக்கம் திரும்பி உள்ளது. இதற்கு எதிரான தெற்கின் சக்திகள் தமிழ் மக்களுடைய அரசியலை அங்கீகரித்து அதனை ஏற்றுக் கொள்வதன் மூலம் பயங்கரவாத தடைச்சட்டத்திற்கு எதிரான செயற்பாட்டை இன்னும் தீவிரபடுத்த முடியும். இல்லையேல் நாடு தொடர்ந்து பிளவுபட்டே இருக்கும் என்பதையும் தெற்கின் சக்திகள் உணர வேண்டும்.- என்றார்.