

சீனாவில் பெய்த புழுக்கள் மழை!
சீனாவின் பெய்ஜிங் நகரில் புழுக்கள் மழை குறித்த வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது.
அறிவியல் கண்டுபிடிப்புகளில் விஞ்ஞானம் எவ்வளவு முன்னேறி இருந்தாலும் இன்னும் சில விஷயங்களுக்கு நம்மிடம் பதில் இல்லை.
சிலநேரங்களில் நிகழும் வினோதமான, விசித்திரமான இயற்கை நிகழ்வுகள் வரும் போது மனிதர்களை அதிர்ச்சியில் ஆழ்த்துகிறது. அப்படி நம்மை குழப்பத்தில் ஆழ்த்தும் நிகழ்வு ஒன்று தற்போது சீனாவில் நடந்துள்ளது.
சீனாவின் தலைநகரமான பெய்ஜிங் நகரில் தான் இந்த விநோதமான நிகழ்வு நடந்துள்ளது. பெய்ஜிங் நகரில் திடீரென புழுக்கள் மழை பெய்துள்ளதாக கூறப்படுகிறது.
மேலும் அவற்றில் பூச்சிகளும் இருந்ததாக சில ஊடகங்கள் கூறுகின்றன. மழைக்குப் பிறகு நகரின் பல தெருக்களில் உள்ள வாகனங்கள், கடைகள் மற்றும் தெருக்களில் புழுக்கள் அதிகளவு தோன்றியதால் மக்களும் அச்சடைந்ததாக சீன ஊடகங்கள் தெரிவித்துள்ளன.
வெளியில் செல்பவர்கள் மறக்காமல் குடைகளை எடுத்துச் செல்லுமாறு சில சீன ஊடகங்கள் அறிவுறுத்தல்களை வெளியிட்டன. சமூக ஊடகங்களில் வெளிவரும் படங்கள் மற்றும் வீடியோக்களில், பூச்சிகளை தவிர்க்க மக்கள் குடையுடன் நிற்பதை காணமுடிகிறது.
இது குறித்து ஆராய்ச்சியாளர்கள் கூறுகையில், இது திடீரென உருவான சூறாவளியால் இந்த புழுக்களை நகருக்குள் கொண்டு வந்திருக்கலாமென கூறுகின்றனர். மேலும் இது தொடர்பான வீடியோ மற்றும் புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகி வருகின்றது.
இந்த வீடியோக்கள் சமூகவலைதளங்களில் வைரலானதை அடுத்து ஒருசிலர் கருத்து தெரிவித்துள்ளனர். அதில் நானும் பெய்ஜிங் நகரில் தான் உள்ளேன். இதுபோன்று சம்பவம் எதுவும் இங்கு நடைபெறவில்லை. இது தவறான வீடியோ என்று கூறியுள்ளார்.