

பதிவு செய்யப்படாத உந்துருளிகளை சட்டரீதியாக பதிவு செய்ய நடவடிக்கை…
பதிவு செய்யப்படாத அதிக இயந்திர வலுகொண்ட உந்துருளிகளை சட்டரீதியாக பதிவு செய்வதற்கான முறைமையை உடனடியாக தயாரிக்குமாறு, போக்குவரத்து மற்றும் பெருந்தெருக்கள் அமைச்சர் பந்துல குணவர்தன அதிகாரிகளுக்கு ஆலோசனை வழங்கியுள்ளார்.
இலங்கைக்கு கொண்டுவரப்பட்டு பொருத்தப்படும், 450 சி.சியை விடவும் அதிக இயந்திர வலுகொண்ட உந்துரளிகளை, உரிய முறையில் பதிவு செய்து பயன்படுத்துவதற்கான முறைமையை தயாரிக்குமாறு கோரி ஸ்பீட் ரைடர் மற்றும் விளையாட்டு சங்கங்களினால் கோரிக்கை முன்வைக்கப்பட்டுள்ளது.
இந்தக் கோரிக்கையைக் கருத்திற்கொண்டு, அமைச்சரினால் குறித்த ஆலோசனை வழங்கப்பட்டுள்ளது.
வெவ்வேறு காலப்பகுதிகளில் நாட்டுக்கு கொண்டுவரப்படுகின்ற அதிக இயந்திர வலுகொண்ட 3000 முதல் 4000 வரையிலான உந்துருளிகள் தற்போது நாட்டின் பல பகுதிகளிலும் பயன்பாட்டில் உள்ளன.
உரிய முறையில் வரி செலுத்தப்படாமல் கொண்டுவரப்பட்டுள்ள இந்த உந்துருளிகளை பதிவு செய்வதற்கு அரசாங்கம் அவதானம் செலுத்தியுள்ளது.