

காஞ்சிபுரத்தில் சுற்றுலா பயணிகள் கடும் அவதி!
காஞ்சிபுரம் நகரில் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்காக கடந்த டிசம்பர் மாதம் கலெக்டர் மா.ஆர்த்தி, பொலிஸ் அதிகாரி சுதாகர் ஆகியோர் தற்காலிகமாக புதிய போக்குவரத்து ஒழுங்கு முறையை அமல்படுத்தினர்.
இதையடுத்து காஞ்சிபுரம் நகருக்குள் சுற்றுலா பஸ்கள் மற்றும் வேன்கள் செல்ல தடை விதிக்கப்பட்டது. அவை காஞ்சிபுரம் பஸ் நிலையத்தில் இருந்து 5 கிலோ மீட்டர் தொலைவில் ஏகாம்பரநாதர் கோவிலுக்கு சொந்தமான சர்வ தீர்த்த குளம் அருகில் நிறுத்தப்பட்டன.
அங்கு பஸ்களை நிறுத்த ரூ.300 கட்டணமும், வான்களுக்கு ரூ.150 கட்டணமும் வசூலிக்கப்படுகிறது. இதனால் சுற்றுலா பயணிகள் காஞ்சிபுரத்தில் உள்ள கோவில்களுக்கு நடந்தோ அல்லது ஆட்டோக்களிலோ மட்டுமே செல்ல முடிகிறது.
ஆட்டோக்களில் கட்டணம் அதிகமாக இருப்பதால் சுற்றுலா செல்லும் பயணிகள் கடும் அவதிக்குள்ளாகி உள்ளனர். தற்போது கோடைகாலம் மற்றும் பள்ளிகளில் விடுமுறை தொடங்க இருப்பதால் ஏராளமானோர் காஞ்சிபுரம் நகருக்கு சுற்றுலா செல்வார்கள். ஆனால் சுற்றுலா பஸ்கள் நகருக்குள் அனுமதிக்கப்படாததால் சுற்றுலா செல்ல பயணிகள் தயக்கம் காட்டி வருகிறார்கள்.