8 யூனிட்டுக்கு ரூ.7,275 மின் கட்டணம்- வேலூர் விவசாயி அதிர்ச்சி

8 யூனிட்டுக்கு ரூ.7,275 மின் கட்டணம்- வேலூர் விவசாயி அதிர்ச்சி

வேலூர் விருதம்பட்டு பகுதியைச் சேர்ந்தவர் சுந்தர்ராஜன். இவர், வெளிநாட்டில் வேலை செய்து வந்தார். சில ஆண்டுகளுக்கு முன்னர் சொந்த ஊருக்கு திரும்பினார். தொடர்ந்து, விவசாயம் செய்யலாம் என முடிவு செய்து, லத்தேரி அடுத்த காளாம்பட்டு பகுதியில் 2 ஏக்கர் நிலம் வாங்கினார்.

இதையடுத்து, அங்கு விவசாயம் செய்வதற்காக இலவச மின்சாரம் கேட்டு விண்ணப்பித்திருந்தார். ஆனால், கிடைக்காததால் மும்முனை மின் இணைப்பு பெற்றார். இந்நிலையில், கடந்த சில மாதங்களாக 500, 700 ரூபாய் என சொற்ப அளவிலேயே மின் கட்டணம் வந்துள்ளது.

கடந்த மாதம் 8 யூனிட் மின்சாரம் மட்டுமே அவர் பயன்படுத்தி இருந்ததாக தெரிகிறது. ஆனால் அவருக்கு 7,275 ரூபாய் மின் கட்டணம் செலுத்தவேண்டும் என அறிவிப்பு வந்துள்ளது.

இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்து லத்தேரி மின்வாரிய அலுவலகத்துக்கு சென்று அவர் கேட்ட போது, அங்கிருந்த ஊழியர்கள் சரியான பதில் அளிக்கவில்லை அதுமட்டுமின்றி. பணத்தை செலுத்தியே ஆகவேண்டும் என திருப்பி அனுப்பியுள்ளனர். இதனால் செய்வதறியாது தவித்த சுந்தர்ராஜன், குறைந்த அளவு மின்சாரம் பயன்படுத்தியதற்கு அதிக கட்டணம் செலுத்த கூறியதற்கான காரணத்தை தெரிவிக்க வேண்டும் என்றும், மெத்தனமாக பதிலளிக்கும் மின்வாரிய ஊழியர்கள் மீது நடவடிக்கை எடுக்கவேண்டும் என்றும் வேலூர் கலெக்டர் அலுவலகத்தில் முறைப்பாட்டு மனு அளித்தார்.

இதுகுறித்து மின்வாரிய அலுவலகத்தில் விசாரித்தபோது, விவசாய தேவைக்கு அனுமதி பெறும்போது மின் மோட்டாரின் வேகத்தை 5 எச்பி, 10 எச்பி என குறிப்பிட்டிருப்பார்கள். பிறகு அதை மாற்றி பயன்படுத்தினால் மின்பளு அதிகரிக்கும். அதற்கான கட்டணத்தை டிஜிட்டல் மீட்டர் தானாகவே பதிவு செய்துவிடும். ஒருவேளை அவர் தவறுதலாக வேறு மின் மோட்டாரை இயக்கி இருக்கலாம். இருப்பினும் இதுகுறித்து விசாரணை நடத்துகிறோம்’ என தெரிவித்தனர்.

CATEGORIES
TAGS
Share This