தமிழ் உணர்வாளர்கள் அமைப்பிற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி!

தமிழ் உணர்வாளர்கள் அமைப்பிற்கு ஜனாதிபதி வழங்கிய உறுதிமொழி!

மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைக் காலத்தையும், விதைப்புக் காலத்தையும் கருத்திற் கொண்டு உரமானியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு மேற்கொள்ளப்படும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உறுதியளித்துள்ளதாக தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் தெரிவித்துள்ளார்.

நேற்றைய தினம் (10) மட்டக்களப்பிற்கு தனிப்பட்ட விஜயமொன்றினை மேற்கொண்டிருந்த ஜனாதிபதியை சந்தித்துக் கலந்துரையாடிய போதே அவர் இந்த உறுதியை வழங்கியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கூறுகையில், “தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் என்ற ரீதியில் நான் ஜனாதிபதியை நட்பு ரீதியாகச் சந்தித்தேன்.

கிழக்குப் பல்கலைக்கழக விடயங்கள் தொடர்பில் ஆராயும் முகமாக கிழக்கு பல்கலைகழகத்தின் துணைவேந்தர் கனகசிங்கம் மற்றும் பதிவாளர் பகிரதன் ஆகியோரும் ஜனாதிபதியுடனான சந்திப்பின் போது கலந்து கொண்டனர்.

இதன்போது உபவேந்தரின் வேண்டுகோளுக்கிணங்க கிழக்குப் பல்கலைகழகத்தில் பொறியியல் பீடத்தை ஆரம்பிக்கவும், இந்திய அரசின் உதவியுடனான கேட்போர் கூடத்தை விரைவாக அமைந்து கொடுக்கவும் ஜனாதிபதி இணக்கம் தெரிவித்தார்.

அத்துடன் மட்டக்களப்பு மாவட்டத்தின் அறுவடைக் காலத்தையும், விதைப்புக் காலத்தையும் கருத்திற் கொண்டு உரமாணியம், நெல்விலை நிர்ணயம் மற்றும் நெல் கொள்வனவு போன்றன மேற்கொள்ளப்பட வேண்டும் என்ற வேண்டுகோள் மாவட்ட விவசாயிகளின் நன்மை கருதி என்னால் விடுக்கப்பட்டது.

இதற்கு என்னால் குறித்துரைக்கப்பட்ட விடயங்களுக்கு ஏற்றவாறே ஆவண செய்யப்படும் என்று ஜனாதிபதி என்னிடம் உறுதியளித்துள்ளார்” என தமிழ் உணர்வாளர்கள் அமைப்பின் தலைவர் தெரிவித்தார்.


CATEGORIES
TAGS
Share This