

யாழ்., ஆதிசிவன் கோவில், கதிரைவேலன் கோயில், சடையம்மா மடத்தின் நிலை என்ன?
யாழ்ப்பாணம் ஆதிசிவன் கோவில், சடையம்மா மடம், கதிரைவேலன் கோயில் ஆகியவற்றின் நிலை என்ன? என்று அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் ஆறு.திருமுருகன் கேள்வி எழுப்பியுள்ளார்
இலங்கை சைவமக்களின் மிகத் தொன்மை வாய்ந்த வரலாற்றிடம் கிரிமலையாகும்.
இந்தப் பகுதியில் கடல் மட்டத்திலிருந்து மிகவும் உயரமான மலை போன்ற ஒரு பாறைப்பகுதியில் ஆதிச்சிவன் கோயில் அமைந்திருந்தது.
அந்த சிவன் கோயில் தற்போது இல்லை.
அத்துடன் பெருமைமிக்க பெண் சித்தரான சடையம்மாவின் சமாதி, கோயில் மடம் அதற்கருகிலிருந்த சங்கர சுப்பையர் சுவாமிகளின் சமாதி, கதிரைவேலன் கோயில் என்பவற்றையும காணவில்லை என்ற செய்தி சைவமக்களுக்கு மிகவும் அதிர்ச்சியை தந்துள்ளது.
சுமார் 33 ஆண்டுகளுக்குப் பின்பு ஆலயத்தை தரிசிக்கலாம் என்று சென்ற மக்களுக்கு இது பேரதிர்ச்சியை தந்துள்ளது.
இது தொடர்பில் இலங்கையின் ஜனாதிபதி மற்றும் அமைச்சரவை பதிலளிக்க வேண்டும் என்று அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் ஆறு.திருமுருகன் கோரியுள்ளார்.
இந்தநிலையில், தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இந்த ஆலயங்கள் தொடர்பாக உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
அழிக்கப்பட்ட கோயில்கள் இருந்த இடத்தை சைவமக்களிடம் உடனடியாக ஒப்படைக்க வேண்டும்.
மீண்டும் அந்த இடங்களில் சைவமக்கள் கோயில்களைக் கட்டுவதற்கான அனுமதியை உடன் வழங்க வேண்டும் என்றும் அவர் கேட்டுள்ளார்.
அத்துடன் மக்கள் தங்கள் நிலங்களை பார்வையிடுவதற்கும் அங்கு எஞ்சியுள்ள கோவில்களை தரிசிப்பதற்கும் உடன் ஒழுங்கு செய்ய வேண்டும் என்றும் அகில இலங்கை இந்துமாமன்ற உப தலைவர் ஆறு.திருமுருகன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.