எமது பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ்தான் பதில் என்றால் கொலையாளி யார்?; முல்லைத்தீவில் உறவுகள் கேள்வி

எமது பிள்ளைகளுக்கு மரணச் சான்றிதழ்தான் பதில் என்றால் கொலையாளி யார்?; முல்லைத்தீவில் உறவுகள் கேள்வி

முல்லைத்தீவு வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகளின் தொடர் போராட்டம் இன்றுடன் ஆறு ஆண்டுகள் நிறைவடைகின்ற நிலையிலும் சர்வதேச மகளிர் தினமான இன்றையதினத்தில் மகளிர் தினத்தை கறுப்பு தினமாக கடைபிடித்து (08) கவனயீர்ப்பு போராட்டம் முல்லைத்தீவில் இடம்பெற்றது.

முல்லைத்தீவு மாவட்ட செயலக முன்பாகவுள்ள சுற்றுவட்ட வளைவில் இந்த போராட்டம் இன்று காலை 10.30 மணியளவில் இடம்பெற்றது.

ஐக்கிய நாடுகள் சபையின் மனிதஉரிமைகள் கூட்ட தொடர் ஜெனீவாவில் தற்போது நடைபெற்றுவரும் தருணத்தில் வலிந்து காணாமல் ஆக்கபட்டவர்களின் உறவுகளுக்கான நீதியை சர்வதேச சமூகம் விரைந்து வழங்க இலங்கை அரசை சர்வதேச குற்றவியல் நீதிமன்றில் பாரப்படுத்துமாறு கோரியும் சர்வதேச நீதி விசாரணையை வலியுறுத்தியும் இன்று உலக மகளிர் தினம் கொண்டாடப்பட்டுவரும் நிலையில் அதனைபெண்கள் உரிமைகள் மறுக்கப்பட்ட கறுப்பு மகளிர் தினமாக பிரகடனம் செய்தும் இந்த போராட்டம் முன்னெடுக்கபட்டது.

இப்போராட்டத்தில், வலிந்து காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள், சமுகமட்டபிரதிநிதிகள், உள்ளிட்டோர் கவனயீர்ப்பு போராட்டத்தை வலுப்படுத்தினர்.

இப்போராட்டத்தில் ஈடுபட்டவர்களால் “உலகெல்லாம் பெண்கள் உரிமை பேசும் இந்நாளில் தெருவில் கிடந்து அழ வைத்திருக்கிறது இந்த அரசு, கால அவகாசம் வேண்டாம் முறையான நீதி விசாரணையே வேண்டும், ஐநாவின் மனித உரிமை கூட்டத்தொடரில் இணை அனுசரணை வழங்கும் நாடுகள் இலங்கை அரசை சர்வதேச நீதிமன்றில் பாரப்படுத்த ஆதரவு நல்க வேண்டும், உள்ளக பொறிமுறை எதுவும் வேண்டாம் சர்வதேச நீதி விசாரணை வேண்டும், இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்ட எமது பிள்ளைகளுக்கு மரணச்சான்றிதழ்தான் பதில் என்றால் கொலையாளி யார்? உங்கள் இராணுவத்தை நம்பி கையளித்த பிள்ளைகள் எப்படி காணாமலாக்கப்பட்டார்கள்? போன்ற கோசங்களை முன்வைத்து கண்ணீருடன் கவயீர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டனர்.

போராட்டத்தில் கலந்து கொண்டவர்களை இராணுவம், இராணுவ புலனாய்வாளர்கள் புகைப்படங்களை எடுத்து அச்சுறுத்தும் செயற்பாட்டில் ஈடுபட்டனர்.

CATEGORIES
TAGS
Share This