

தேர்தல் பிற்போடுவதற்கான காரணம் அரசாங்கத்தையே சாரும்: அங்கஜன் குற்றச்சாட்டு..
அரசியலமைப்பின் அடிப்படை உரிமையான உள்ளுராட்சிமன்ற தேர்தல் கட்டாயமாக நடாத்தப்பட வேண்டும் எனவும் தேர்தலுக்கான நிதியினை வழங்காவிடில் அரசாங்கமே அதன் பொறுப்பினை ஏற்க வேண்டும் எனவும் சிறிலங்கா சுதந்திர கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.
இன்று ஊடகவியாளர்கள் எழுப்பிய வினாக்களுக்கு பதிலளிக்கும் போதே அவ்வாறு தெரிவித்துள்ளார்.
மேலும் தெரிவிக்கையில்,மக்களுக்கு இந்த தேர்தல் வேண்டுமா? இல்லையா? என்பது ஒரு புறம் இருக்கட்டும். ஆனால் அரசியலமைப்பினை பொறுத்த வரை தேர்தல் வைத்தாக வேண்டும்.
இவ் தேர்தல் அரசியலமைப்பின் அடிப்படை உரிமையாகும் , அவ்வாறிருக்கையில் தேர்தலினை நடத்தவிடாது வேறொருவர் தடுப்பதனை மக்களால் ஏற்றுக்கொள்ள முடியாது.
அதனடிப்படையில் தேர்தல் நிச்சயம் வைக்கப்பட வேண்டும். அதற்கான நிதி ஒதுக்கீடு தொடர்பாக உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது. அதற்கான நிதி ஒதுக்கீட்டினையும் செய்ய வேண்டும்.
ஆகவே அரசாங்கம் அதற்கான நிதியினை வழங்கும் என நான் நம்புகின்றேன். அவ்வாறு அவர்கள் அதனை வழங்காவிடில் இந்த தேர்தல் பிற்போடுவதற்கான காரணமும் அரசாங்கத்தினையே சாரும். எனவும் குற்றம் சுமத்தியுள்ளார்.