கொழும்பில் அபாய நிலையில் 600 மரங்கள்: சீரற்ற காலநிலையால் 20 மரங்கள் முறிவு

கொழும்பில் அபாய நிலையில் 600 மரங்கள்: சீரற்ற காலநிலையால் 20 மரங்கள் முறிவு

சீரற்ற காலநிலை காரணமாக கொழும்பு நகரசபை எல்லைக்கு உட்பட்ட பிரதேசங்களில் மாத்திரம் இது வரையில் 20 மரங்கள் முறிந்து விழுந்துள்ளதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் பத்ராணி ஜயவர்தன தெரிவித்தார்.

எனினும், இதன் காரணமாக கொழும்பு நகரில் எதுவிதமான உயிர் சேதங்களும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்தார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் கொழும்பு டுப்ளிகேஷன் வீதியில் பேருந்தின் மீது மரமொன்று முறிந்து விழுந்த சம்பவம் பதிவாகியதன் பின்னர் கொழும்பில் அபாய நிலையில் 600 மரங்கள் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டதாக அவர் சுட்டிக்காட்டினார்.

அவற்றுள், விரைவில் வெட்டி அகற்ற வேண்டிய அபாய நிலையில் 227 மரங்கள் காணப்படுவதாக தெரியவந்துள்ளது.

குறித்த 227 மரங்களுள் 80 மரங்கள் மாத்திரமே தற்போது முழுவதிலுமாக அகற்றப்பட்டுள்ளன.

எஞ்சியுள்ள மரங்களை வெகு விரைவில் அகற்ற நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக கொழும்பு மாநகரசபை ஆணையாளர் தெரிவித்தார்.

இதுவரையில் முறிந்து விழுந்துள்ள மரங்கள் எதுவும் இதற்கு முன்னர் அபாய நிலையில் காணப்படுவதாக அடையாளம் காணப்பட்டவை அல்ல எனவும் இவ்வாறு மரங்கள் முறிந்து விழுவதற்கான காரணம் பலத்த காற்று மற்றும் கடும் மழை எனவும் அவர் குறிப்பிட்டார்.

மேலும், வெகு விரைவில் அபாய நிலையில் காணப்படக்கூடிய மரங்களை அகற்ற நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக அவர் தெரிவித்தார்.

எவ்வாறாயினும், இந்த நாட்களில் பெய்து வரும் கடும் மழை மற்றும் பலத்த காற்று காரணமாக மரங்கள் முறிந்து விழுவதால் உயிரிழப்புகள் பதிவாகியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

CATEGORIES
Share This