![தேர்தலை பிற்போட ஜனாதிபதி சூழ்ச்சி செய்தால் பதவி காலம் நிறைவடைய முன் வீடு செல்ல நேரிடும்! தேர்தலை பிற்போட ஜனாதிபதி சூழ்ச்சி செய்தால் பதவி காலம் நிறைவடைய முன் வீடு செல்ல நேரிடும்!](https://uthayamnews.com/wp-content/uploads/2024/02/1-News-Image-117.jpg)
தேர்தலை பிற்போட ஜனாதிபதி சூழ்ச்சி செய்தால் பதவி காலம் நிறைவடைய முன் வீடு செல்ல நேரிடும்!
நாட்டின் அரசியலமைப்பின் பிரகாரம் ஜனாதிபதி தேர்தலை நடத்த எதிர்வரும் செப்டம்பர் அல்லது ஒக்டோபர் மாதமளவில் நடத்த வேண்டும்.தேர்தலை பிற்போட ஜனாதிபதி சூழ்ச்சி செய்தால் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் ஜனாதிபதி வீடு செல்ல நேரிடும் என மக்கள் விடுதலை முன்னணியின் தலைவரும்,பாராளுமன்ற உறுப்பினருமான அனுர குமார திஸாநாயக்க தெரிவித்தார்.
குருநாகல் பகுதியில் ஞாயிற்றுக்கிழமை (18) இடம்பெற்ற அரசியல் கூட்டத்தில் உரையாற்றுகையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிட்டதாவது,
குழந்தை பிறந்தவுடன் பெற்றோர் தனது பிள்ளைகளின் எதிர்காலம் பற்றி அறிய சோதிடம் பார்க்கிறார்கள்.சோதிடத்தில் ஏதேனும் பாதிப்புக்கள் இருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தால் அதற்கு பரிகாரம் செய்வார்கள்.அதன் பின்னர் தேர்தல் காலத்தில் மஹிந்த ராஜபக்ஷவுக்கும்,ராஜபக்ஷர்களுக்கும் வாக்களிக்கிறார்கள்.பிள்ளைகளின் எதிர்காலம் சிறப்பாக இருக்க வேண்டும் என்பதற்காக பரிகாரம் செய்து விட்டு ராஜபக்ஷர்களுக்கு வாக்களித்தால் பரிகாரம் எவ்வாறு சாத்தியமடையும்.
2020 ஆம் ஆண்டு இடம்பெற்ற பொதுத்தேர்தலில் குருநாகல் மாவட்ட மக்கள் மஹிந்த ராஜபக்ஷவுக்கு 5 இலட்சத்துக்கும் அதிகமான விருப்பு வாக்குகளை வழங்கினார்கள்.இதனால் என்ன பயன் கிடைக்கப் பெற்றது என்பதை குருநாகல் மாவட்ட மக்கள் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.பொதுஜன பெரமுனவுக்கு மக்கள் வழங்கிய மக்களாணை இன்று முழுமையாக இல்லாதொழிக்கப்பட்டுள்ளது.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்கிரமசிங்க தனி ஆசனத்துடன் பாராளுமன்றத்துக்கு வந்தார்.நெருக்கடியான நிலையில் அரசாங்கத்தை பொறுப்பேற்றார் என்று பொதுஜன பெரமுனவினர் தற்போது புகழ்பாடுகிறார்கள்.2022 ஆம் ஆண்டு மார்ச் மாதமளவில் அப்போதைய பிரதமர் மஹிந்த ராஜபக்ஷ உட்பட அமைச்சரவை பதவி விலகியதை தொடர்ந்து பிரதமர் பதவியை ஏற்குமாறு கோட்டபய ராஜபக்ஷ எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாசவுக்கு அழைப்பு விடுத்தார்.அவர் அதனை ஏற்கவில்லை.
அதன் பின்னர் கோட்டபய ராஜபக்ஷ,சரத் பொன்சேகாவிற்கு அழைப்பு விடுத்தார்.மூன்;று நாட்களுக்கு பின்னர் பதிலளிப்பதாக அவர் குறிப்பிட்டார்.மூன்று நாட்கள் கூட நெருக்கடியை சமாளிக்க முடியாத நிலையில் கோட்டபய ராஜபக்ஷ,ரணில் வி;க்கிரமசிங்கவுக்கு அழைப்பு விடுத்தார் அவர் எவ்வித நிபந்தனைகளும் இல்லாமல் பிரதமர் பதவியை ஏற்றுக்கொண்டார்.
2020 ஆம் ஆண்டு பொதுத்தேர்தல் பிரசாரங்களில் ‘மத்திய வங்கியின் பிரதான சூத்திரதாரியான ரணிலை சிறைக்கு அனுப்புவோம்’ என்பது பொதுஜன பெரமுனவின் பிரதான அரசியல் வாக்குறுதியாக அமைந்தது.ரணில் விக்கிரமசிங்கவுக்கு எதிராகவே 2019 ஆண்டு ஜனாதிபதி தேர்தலிலும்,2020 ஆம் ஆண்டு பொதுத் தேர்தலிலும் மக்கள் ராஜபக்ஷர்களுக்கு ஆணை வழங்கினார்கள்.ஆகவே தனக்கு எதிரான மக்களாணையில் ஆதிக்கம் செலுத்துவதையிட்டு ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க வெட்கப்பட வேண்டும்.ராஜபக்ஷர்களின் நம்பிக்கையான பாதுகாவலன் ரணில் விக்கிரமசிங்க என்பதால் பொதுஜன பெரமுன ரணில் விக்கிரமசிங்கவை ஜனாதிபதியாக தெரிவு செய்தது.
அரசியலமைப்பின் பிரகாரம் எதிர்வரும் செப்டெம்பர் மாதம் அல்லது ஒக்டோபர் மாதமளவில் ஜனாதிபதி தேர்தல் நடத்தப்பட வேண்டும்.ஜனாதிபதி தேர்தல் நெருங்குகின்ற நிலையில் தான் நிறைவேற்று அதிகாரமிக்க ஜனாதிபதி முறைமை என்பதொன்று நாட்டில் அமுலில் உள்ளது என்பது ஜனாதிபதிக்கு நினைவுக்கு வந்துள்ளது.நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறைமை தேவையா,இல்லையா என்பதை நாட்டு மக்களே தீர்மானிக்க வேண்டும்.மக்களாணை இல்லாத இடைக்கால ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவால் தீர்மானிக்க முடியாது.
ஜனாதிபதி தேர்தலை பிற்போட்டு தனது பதவி காலத்தை நீடித்துக் கொள்ள ஜனாதிபதி முயற்சித்தால் பதவி காலம் முடிவடைவதற்கு முன்னர் அவர் வீடு செல்ல நேரிடும்.ஜனாதிபதி மற்றும் பொதுத்தேர்தலை உரிய காலத்தில் நடத்தாவிடின் அதன் விளைவு பாரதூரமானதாக அமையும் என்றார்.